
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் நுவனிந்து ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், சரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் ஷனகா 31 ரன்களையும், கருணரத்னே 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.