
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபாரமான துவக்கத்தை கண்ட நியூசிலாந்து அணியானது இன்று நடந்த போட்டியிலும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.
அந்த வகையில் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்த நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை எளிதில் நிறுத்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டது. ஆனால் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்து அசத்தியது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் வில் யங் 70 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 51 ரன்களையும், கேப்டன் டாம் லேதம் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.