
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது லக்னோ அணி. ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி(61) மற்றும் டு பிளெசிஸ்(79) இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மேக்ஸ்வெல், 24 பந்துகளில் அரைசதம் கடந்து, 59 ரன்களுக்கு அவுட்டானார். 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய லக்னோ அணிக்கு மேயர்ஸ்(0), குர்னால் பாண்டியா(0), தீபக் ஹூடா (9) மூவரும் ஆட்டமிழக்க, 23/3 என லக்னோ அணி தடுமாறியபோது, உள்ளே வந்த ஸ்டாய்னிஷ் வெறும் 65(30) ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் உள்ளே வந்த நிக்கோலஸ் பூரான், நிறுத்தாமல் சிக்ஸர் மழை பொழிந்து 15 பந்துகளில் அரைசதமடித்தார். 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்து சிராஜ் பந்தில் அவுட்டானார்.
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்தால் மேலும் பரபரப்பானது. 4ஆவது பந்தில் ஆட்டம் சமன் ஆனது. 5ஆவது பந்தில் விக்கெட் போனது. 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது, தினேஷ் கார்த்திக் செய்த தவறால் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.