
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்தது 50 ரன்களையும், அணியின் கேப்டன் ராஜத் படிதார் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்ஷிம்ரன் சிங் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஜோஷ் இங்கிலிஸ் 14, ஷஷாங்க் சிங் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தாலும் நேஹல் வதேரா 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.