
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேச அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 73 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் நிச்சயம் இந்திய அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹதி ஹாசன் மற்றும் முஸ்தஃபிசுர் ரகுமான் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.