Advertisement

நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!

எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 06, 2023 • 19:22 PM
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்! (Image Source: Google)
Advertisement

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை இலங்கையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அதில் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாக் அவுட் சுற்றிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இருப்பினும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் 350க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து வெற்றி வாகை சூடியது.

ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக லீக் சுற்றில் சதமடித்த தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் நிக்கின் ஜோஸ் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நடுவர்கள் வழங்கிய கண்மூடித்தனமான தீர்ப்பு இந்தியாவின் தோல்வியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது. இருப்பினும் அந்த தொடரில் விளையாடிய இந்திய வீரர்களில் யாருமே ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவத்தை கொண்டிராத போதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது.

Trending


ஏனெனில் இதே தொடரில் விளையாடிய பெரும்பாலான அணிகளில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருந்தார்கள். குறிப்பாக இளம் வீரர்களுக்காக நடத்தப்பட்ட இந்த தொடரில் 2015 உலகக்கோப்பை உட்பட 149 சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவத்தை கொண்ட சௌமியா சர்க்கார் வங்கதேச அணிக்காக விளையாடினார். அதே போல கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமத் ஹரிஸ் உட்பட நிறைய வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.

அப்படி இளம் வீரர்களுக்காக நடத்தப்பட்ட தொடரில் சர்வதேச அளவில் விளையாடிய மூத்த வயதுடைய வீரர்கள் களமிறங்கியதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் என்னையா இது பித்தலாட்டமா இருக்கு என பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வழக்கம் போல கலாய்த்தனர். இந்நிலையில் இந்த தொடரில் சர்வதேச அளவில் விளையாடாத வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் சொன்னோமா? என இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தங்களுடைய அணியில் வெறும் 5 – 6 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மட்டுமே கொண்ட வீரர்கள் இருந்ததாக தெரிவிக்கும் அவர் இந்திய அணியில் சர்வதேச அளவில் விளையாடாவிட்டாலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான தரத்தை கொண்டு ஐபிஎல் தொடரில் 260 போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இங்கே பலரும் பாகிஸ்தான் நிறைய சீனியர் வீரர்களுடன் களமிறங்கியதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடம் சிறிய குழந்தைகளை இந்த தொடருக்கு அனுப்புங்கள் என்று நாங்கள் எப்போதும் கேட்கவில்லை. மேலும் அவர்கள் எங்களுடைய அணியில் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் இருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் நாங்கள் எவ்வளவு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளோம்? சைம் 5 போட்டிகளிலும் நான் 6 போட்டிகளிலும் விளையாடியுள்ளேன். மறுபுறம் இந்திய அணியில் 260 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருந்தார்கள்” என்று தடாலடியாக பேசினார். ஆனால் உண்மையாகவே இந்திய அணியில் சாய் சுதர்சன் முதல் ரியன் பராக் வரை யாருமே 100 ஐபிஎல் போட்டிகளில் கூட விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement