
Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் படி அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் சாய் சுதர்ஷனின் ஷாட்டைத் தடுக்க முயன்றபோது கையில் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.