
பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. மறுபக்கம் மூத்த வீரர் அசார் அலியை வெற்றியுடன் வழியனுப்பவும், ஆறுதல் வெற்றியை பெறவும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஃபிக் - மசூத் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், இங்கிலாந்து அணி ஜாக் லீச்சை முன்னதாக பந்துவீச கொண்டு வந்தது. அதற்கு பலனாக ஷாஃபிக் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மசூத் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அசார் அலி - பாபர் அசாம் இணை சேர்ந்தது.