
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கல் ஜாகிர் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்திருந்த நிலையில் மொமினுல் ஹக் 50 ரன்களிலும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாத்மான் இஸ்லாம் 93 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 316 ரன்களைச் சேர்த்து முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது.