
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. அதன்பின் மிகுந்த எதிர்பார்ப்புக்குட்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கு இந்தியா சார்பில் விசா தரப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மட்டும் இன்னும் விசா வழங்கப்படவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.