
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பாபர் ஆசாம் (161 ரன்), அஹா சல்மான் (3 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து ஆடினர். டிம் சவுதியின் முதல் ஓவரிலேயே பாபர் அசாம் (161 ரன்) விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அஹா சல்மான் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த நமன் அலி 7 ரன் மட்டுமே எடுத்த போதிலும் 75 பந்துகளை சமாளித்தார். பின்வரிசை வீரர்களின் உதவியுடன் தனது, 'கன்னி' சதத்தை ருசித்த அஹா சல்மான் 103 ரன்களில் (155 பந்து, 17 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக எல்.பி.டபிள்யூ. ஆனார்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 130.5 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்தின் இன்னிங்சை டாம் லாதமும், டிவான் கான்வேயும் தொடங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி சூப்பரான அடித்தளம் அமைத்தது. இவர்களை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் பலன் இல்லை.