
ஐசிசியின் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளன. இதற்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வந்த ஒவ்வொரு அணி வீரர்களுக்கான மெனு பட்டியல் வெளியாகியது. அதில், எந்த அணிக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மாட்டிறைச்சி இல்லாத நிலையில் அனைத்து அணிகளுக்கும் வித்தியாசமான மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன், வறுத்த மீன் மற்றும் பாஸ்மதி அரிசி, ஸ்பாகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த செப்ட்ம்பர் 29ஆம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டி முடிந்தவுடன், பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற அசைவ உணவகமான ஜுவல் ஆஃப் நிஜாமுக்கு சென்று உணவருந்தினர். அந்த உணவகத்துக்குச் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக உணவு உண்டதுடன், அந்த ஹோட்டலில் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.