
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 108, டேவிட் மாலன் 87 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் 339/9 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து 340 ரன்களை துரத்திய நெதர்லாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 37.2 ஓவரில் 179 ரன்களுக்கு ஆளவட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமனரு 41* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் அடில் ரசித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
இதன்மூலம் ஏற்கனவே இத்தொடரிலிருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 2ஆவது வெற்றியை பதிவு செய்து 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 6ஆவது தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணியை தோற்கடித்த அந்த அணி இப்போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகளில் சில தருணங்களில் அபாரமாக செயல்பட்டது.