
தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டது அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த கையோடு பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்த நிலையில் தான் இப்போட்டியானது கைவிடப்பட்டது.