ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமானது. மழை நின்ற பின் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜானி பேர்ஸ்டோவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களிலும், திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 15 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதில் நமன்தீர் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்ஷிம்ரன் சிங் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் பிரியான்ஷுடன் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் பிரியான்ஷ் ஆர்யா 20 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்த ஜோஷ் இங்கிலிஸும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நெஹால் வதேரா இணை பொறுப்புடன் விளையடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் நெஹால் வதேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
Also Read: LIVE Cricket Score
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களீல் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now