Advertisement

சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 08, 2023 • 14:37 PM
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டு, தற்போது டி20 போட்டியில் விண்டீஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியிடம் படுதோல்வியைச் சந்தித்த விண்டீஸ் அணி, டி20 தொடரில் மாஸ் காட்டி வருகிறது. 

முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்த விண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார்.

Trending


அதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், சார்லஸ் போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், நிக்கோலஸ் பூரன் (67) மற்றும் கடைசி நேரத்தில் களமிறங்கிய பந்துவீச்சாளர்களின் பயம் இல்லாத பேட்டிங்கின் மூலம் 18.5 ஓவரில் இலக்கை எட்டிய விண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விண்டீஸ் அணியுடனான இரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து மோசமான வரலாறுகளில் இடம்பெற்றிருந்தாலும், இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு திலக் வர்மா என்ற  பயம் இல்லாத ஒரு அதிரடி பேட்ஸ்மேன் கிடைத்துள்ளது ஒரு நல்ல விசயமாகவே பார்க்கபப்டுகிறது. முன்னாள் வீரர்கள் மற்றும்  கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் திலக் வர்மாவை வியந்து பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், திலக் வர்மா குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின், திலக் வர்மாவிற்கு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “வெறும் இரண்டு போட்டிகளில் திலக் வர்மா ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். ஆடுகளம் மந்தமாக இருந்த போதிலும் பயம் இல்லாத அவர் அடித்த சில ஷாட்கள் ஆச்சரியமாக இருந்தது. அவரது பேட்டிங் ஸ்டைல் தனித்துவமிக்கதாக உள்ளது. அவரது பேட்டிங் ஸ்டைல் ரோஹித் சர்மாவை போன்று இருப்பதாக நான் கருதுகிறேன். 

புல் ஷாட் அடிப்பது இலகுவானது அல்ல, ஆனால் திலக் வர்மா அதை அசால்டாக செய்கிறார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை போன்று திலக் வர்மாவும் அசால்டாக புல் ஷாட் அடித்து பந்தை பவுண்டரி கோட்டிற்கு வெளியே அனுப்புவது பார்ப்பதற்கும் அழகாக உள்ளது. திலக் வர்மாவிற்கு ஒருநாள்  உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கொடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மேனின் தேவை இந்திய அணிக்கும் உள்ளது. 

சஞ்சு சாம்சன் சிறந்த வீரர் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு இந்திய அணி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இடது கை பேட்ஸ்மேன்களை இலகுவாக சமாளிக்க கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடமே பெரிதாக இல்லை, இந்திய அணி இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement