
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆறு போட்டிகளில் இந்திய அணி எந்த வீரரையும் மாற்றாமல் விளையாடி உள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் என சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய அணி.
அதே சமயம், லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அஸ்வினை ஆட வைத்தது. அந்தப் போட்டியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து இருந்தது. இந்தப் போட்டி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியை தவிர அஸ்வின் வேறு எந்த உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அஸ்வின் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.