
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் ஆஸ்திரேலியா சென்றடைந்ததுடன், பயிற்சி ஆட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்கள் காயங்களில் இருந்து மீண்டதுடன் பயிற்சிக்கும் திரும்பினர்.
ஆனால் அதேசமயம் ஷுப்மன் கில்லின் காயம் மோசமடைந்ததன் காரணமாக அவரால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காப்பட்ட ரோஹித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு செல்லவில்லை.