-mdl.jpg)
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றோடு விடை பெற்றுள்ளது . இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.
முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டியது. மும்பையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 7 விக்கெட்களை 91 ரன்களுக்குள் கைப்பற்றி இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அந்த வெற்றியை ஆஃப்கனிடம் இருந்து பறித்தார்.
இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அகமதாபாத்தின் பிளாட்ஃபார்ம்களில் உறங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பண உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.