Advertisement

கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!

நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan December 27, 2022 • 11:09 AM
Ramiz Raja warns India against 'bossing' Pakistan
Ramiz Raja warns India against 'bossing' Pakistan (Image Source: Google)
Advertisement

2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நிறைய தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன்பின் பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் போட்டிகளில் தோற்ற அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும், துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இறுதிப்போட்டிகளில் தோற்றது.

இந்த அனைத்து தோல்விகளுக்கும் சுமாரான பிட்ச் உருவாக்கியது முதல் சொதப்பலான அணி தேர்வு செய்தது வரை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் வாரிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஷ் ராஜா முக்கிய காரணமாக அமைந்ததால் கடந்த வாரம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க உங்களது நாட்டுக்கு வர முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்த நிலையில் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாங்களும் வரமாட்டோம் என்று அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

Trending


அத்துடன் பணக்கார இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்தோம், பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார் என கடந்த சில மாதங்களில் அவர் இந்தியாவை ஏராளமாக விமர்சித்து ரசிகர்களின் அதிருப்தியை வாங்கி கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வாரியம் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் யூடியூப் பக்கத்தில் விமர்சகராக மாறியுள்ளார். 

இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய ரசிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளாக நான் வர்ணனையாளராக செய்த பணியை மிகவும் ரசித்துள்ளேன் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் கிரிக்கெட் தடைகளையும் எல்லைகளையும் உடைத்து கடக்க உதவுகிறது. ஒரு கிரிக்கெட் வீரராக வர்ணனையாளராக நான் அங்கே நிறைய அன்பை பெற்றுள்ளேன்

ஆனால் கிரிக்கெட் நிர்வாகியாக வரும் போது நீங்கள் சில வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வலுவான முடிவுகள் இந்திய கண்ணோட்டத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. மறுபுறம் பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களும் வாரியமும் தங்கள் சொந்த பலன்களை எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றதில் இருந்து தான் பிரச்சனைகள் தொடங்கியது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என்று நினைத்த இந்தியா அதை பாகிஸ்தானில் நடத்த விடாமல் பொதுவான இடத்தில் நடத்த விரும்பியது

ஆனால் நீண்ட நாள்களுக்குப்பின் இப்போது தான் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு அணிகள் வர துவங்கியுள்ளதால் அந்த பலதரப்பு தொடரை நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும் சமீப காலங்களில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு நாங்கள் சவால் கொடுத்தோம். அதனால் அவர்கள் மீண்டும் வந்து விளையாடுகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து சில எக்ஸ்ட்ரா போட்டிகளில் விளையாடியது. அந்த வகையில் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. எனவே அதிலிருந்து விலகும் முடிவை இதர உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் நாங்கள் எடுக்க முடியாது.

மேலும் இங்குள்ள மக்கள் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பாகிஸ்தானில் விளையாடுவதை காணவேண்டும் என்றும், இந்திய ரசிகர்கள் பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி ஆகியோர் இந்தியாவில் விளையாடவேண்டும் என்றும் விரும்புகின்றனர். அதற்கு இத்தொடர் முக்கியமான ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement