ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சித்தேஷ் லத் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஹானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 0, ஷிவம் தூபே ரன்கள் 0, ஷம்ஸ் முலானி 4, ஷர்துல் தாக்கூர் 37 என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஆகாஷ் ஆனந்த் சதமடித்து அசத்திய கையோடு 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய தனுஷ் கோடியானும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் பரத் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதர்வா டைடே ரன்கள் ஏதுமின்றியும், துருவ் ஷோரே 13, கருண் நாயர் 6, டேனிஷ் மாலேவார் 29 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை யாஷ் ரத்தோட் 59 ரன்களுடனும், அக்ஸய் வத்கர் 31 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அக்ஸய் வத்கர் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கலூம் ரன்களைச் சேர்க்க தடுமாறினர்.
இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய யாஷ் ரத்தோட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 151 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை அணிக்கு 406 ரன்கள் என்ற இலக்கையும் விதர்பா அணி நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் ஆயூஷ் மத்ரே 18, சித்தேஷ் லத் 2, கேப்டன் அஜிங்கிய ரஹானே 12 ரன்களில் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்களைத் தொடர்ந்து ஆகாஷ் ஆனந்துடன் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் மும்பை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. இதில் ஆகாஷ் ஆனந்த் 27 ரன்களுடனும், ஷிவம் தூபே 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now