
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையு, அறிமுக வீரர் சஃப்ராஸ் கான் 62 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல் தங்களது பாஸ்பால் யுக்தியைப் பயன்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
அதிலும் அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதனால் இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். அதன்பின் பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை கைப்பற்றி அந்த கூட்டணியை உடைத்தார்.