
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. நாளை மறுநாள் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் எல்லா அணிகளுக்கும் துவங்க இருக்கிறது. பங்கேற்கும் பத்து அணிகளும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயமாக உலகக் கோப்பையின் பயிற்சி போட்டிகள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. மேலும் இந்த இரண்டு அணிகளுமே தங்களின் முதல் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகியுள்ள விதத்தை எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்கு என்று எதுவும் கிடையாது. எல்லா பெட்டிகளையும் டிக் அடித்து, மேலும் எல்லா வீரர்களும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு ஒரு சிறிய பிரச்சனை இருக்கக்கூடிய இடமாக, சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலா? இல்லை ரவிச்சந்திரன் அஸ்வினா? என்பதுதான் இருந்து வருகிறது. மேலும் சரத்துல் தாக்கூர் இடத்தில் ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறுவாரா? என்பதும் இருக்கிறது.