
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசன் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் ச்தோனியை எதிர்வரும் சீசனில் அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன்களில், ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து 5 ஆண்டுகளை கடக்கும் பட்சத்தில் அவரை வாங்கும் ஐபிஎல் அணிகள் அன்கேப்ட் வீரராக தங்கள் அணியில் இணைத்துக்கொள்ளும் விதிமுறையானது இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த விதியை பிசிசிஐ மாற்றியமைத்திருந்தது. இந்நிலையில் தான் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கான கூட்டத்தில் இந்த விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்து பிசிசிஐ தரப்பில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்ல. இதனால் சிஎஸ்கே அணியின் இந்த கோரிக்கையானது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதனை காலம் தான் பதில் சொல்லும். இந்நிலையில், தற்போது இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆவதால், அவர் அன்கேப்ட் வீரராக விளையாட முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.