
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதோடு முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் 10ஆம் தேதி சட்டகிராம் நகரில் நடைபெற்று முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 14ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த ஒருநாள் தொடரில் ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ரோஹித் சர்மாவும் கடந்த இரண்டாவது போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அதோடு மும்பைக்கு திரும்பும் அவர் பரிசோதனைக்கு பிறகு தான் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்த தகவல் வெளியாகும்.