
இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக விளையாடி வருகிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார்.
அது அவருக்கு தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக 16 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.