
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய மிட்செல் மார்ஷ், அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.