இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டோராடூன் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பந்த், சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவமனையின் மருத்துவக்குழு மற்றும் பிசிசிஐ-ன் மருத்துவக்குழு இணைந்து பந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிஷப் பந்துக்கு எந்தவித எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும் காலில் மூட்டுப்பகுதியிலும், கணுக்கால் பகுதியிலும் தசைநார்கள் கிழிந்துள்ளன. அதற்காக 2 அறுவை சிகிச்சைகளையும் செய்தே தீர வேண்டும். ஆனால் எதிர்பார்த்ததை விட தசைநார் கிழிவு பெரிதாக இருப்பதால், வெகு சீக்கிரம் குணமடைவார் என எதிர்பார்க்க வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.