
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 172 ரன்கள் குவிக்க அடுத்ததாக சிஎஸ்கே அணி வெற்றி பெற 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அணி 2ஆவது இன்னிங்சை துவங்கும்போது முதல் ஓவரின் 4ஆவது பந்தில் டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தும் வெளியேற சென்னை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
அடுத்ததாக மூன்றாவது வீரராக மொயின் அலி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரெய்னாவுக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த உத்தப்பா களமிறங்கினார். அவர் ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் (19,2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா ? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் தான் களமிறங்கிய முதல் பந்திலே உத்தப்பா பவுண்டரி அடித்து துவங்கினார். அதன் பின்னர் எந்த ஒரு கட்டத்திலும் அவரை டெல்லி அணி பவுலர்களால் நிறுத்த முடியவில்லை. இறுதியில் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த தோனி இறுதிநேரத்தில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும் துவக்கத்தில் முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்த பின்னர் அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தது உத்தப்பா தான்.