
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது. இறுதியில் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.