Advertisement

ஐபிஎல் 2023: சிக்சர்களில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசி முதல் இந்திய வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2023 • 12:52 PM
Rohit Sharma becomes the first Indian batter to complete 250 sixes in IPL!
Rohit Sharma becomes the first Indian batter to complete 250 sixes in IPL! (Image Source: Google)
Advertisement

மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 
 
இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் க்ரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.

Trending


கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார் அர்ஷ்தீப் சிங் . அப்போதும் மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.

அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். 5ஆவது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 6ஆவது பந்தில் மட்டுமே ஒரு ரன் எடுக்கப்பட, கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடிய 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோஹித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். முதல் இந்திய வீரராக ஹிட்மேன் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களும், ஏபிடிவிலியர்ஸ் 251 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். இவர்களது வரிசையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவதாக ரோஹித் சர்மா 250 சிக்ஸர்களுடன் இணைந்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement