
மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 31ஆவது ஐபிஎல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் க்ரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார் அர்ஷ்தீப் சிங் . அப்போதும் மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.