
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணி, இந்த வருடத்திற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிரட்டல் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடுமையாக திணறியது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 168 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை விட மிக மோசமாக செயல்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தனர்.
சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இன்று வரையில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது அதிருப்திகளை முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.