
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 112 ரன்களும், ரோஹித் சர்மா 101 ரன்களும், ஹர்திக் பாண்டியா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.
இதன்பின் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். ஹென்ரி நிக்கோலஸ் (42), டேரியல் மிட்செல் (24), பிரேஸ்வெல் (26) போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டை இழந்தனர்.