-lg1-mdl.jpg)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அரைசதம் கடந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு அதிவேகமாக 15ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் அவர் மேற்கொண்டு 7 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.