
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அந்த அறிவிப்பில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
மேலும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.