
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 45.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு டாப்லி வில்லனாக உருவெடுத்தார். முதல் விக்கெட்டாக ஷிகர் தவானை ஒரு ரன்னில் அவுட் ஆக்கியவர், அடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியையும் 17 ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக தொடங்கினாலும், 16 ரன்களில் அவுட் ஆனார்.
இதன்பின்தான் இந்திய அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டனர். ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் கூட்டணி 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. பின்னர் அதிரடி காட்ட தொடங்கிய பந்த் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடிய பண்ட் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லே வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் விரட்டினார் பந்த் . இறுதியில் இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ரிஷப் பந்த் , 113 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.