
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசியதுடன், அந்த ஓவரில் 28 ரன்களைச் சேர்த்து அனைவரையும் மிரளவைத்தார்.
அதன்பின்னும் தனது அதிரடியைக் கைவிடாத ரோஹித் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்களைச் சேர்த்தது.