
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டையும் முடித்துக் கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் இரண்டு தொடர்களும் முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் அணியை விட்டு வெளியேறி வந்திருக்கிறார்கள். இதில் விராட் கோலி நாடு திரும்ப, ரோஹித் சர்மா அமெரிக்காவில் தன்னுடைய கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நிகழ்வில் பங்கு பெற்று இருக்கிறார்.
இந்த நிகழ்வில் அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எல்லா கேள்விகளுக்குமே அவர் முடிந்த வரையில் வெளிப்படையாகவே அவருடைய பாணியில் பதில் கூறிக்கொண்டு வருகிறார். அந்தவகையில் இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் போனது, 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட இருப்பது என பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.