
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு வழக்கம்போல் ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அதன்பின் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷஃபாலி வர்மா 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஜார்ஜியே வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலிஸ் கேப்ஸி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.