கவுண்டி ஒப்பந்தத்திலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார்.
இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 633 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 115 ரன்களையும் எடுத்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நிலையிலும் அவரது இடம் இந்திய அணியில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.
மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகினார். அதன்பின் இங்கிலாந்து சென்றிருந்த இந்திய ஏ அணியின் ஒரு அங்கமாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்த நிலையிலும், அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதிசெய்யும் முயற்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கடுமையாக போராடி வருகிறார்.
இந்நிலையில் தான் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்சமயம் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய யார்க்ஷயர் அணியின் தலைமை பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத், “துரதிர்ஷ்டவசமாக ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் விளையாட முடியவில்லை. இத்தொடரில் இருந்து அவர் விலகியுள்ளது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் ஏன் விலகினார் என்பதற்கான காரணத்தை நான் உங்களிட்ம் கூற முடியாது, ஆனால் எல்லாம் சரியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக யார்க்ஷயர் அணியில் இணைந்தது குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “இங்கிலாந்து உள்நாட்டு சீசன் முழுவதும் யார்க்ஷயருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் கிரிக்கெட்டை அனுபவிப்பது எப்போதும் என்னுடைய இலக்காக இருந்து வருகிறது, இங்கிலாந்தில் யார்க்ஷயரை விட பெரிய கிளப் எதுவும் இல்லை. மேலும் முக்கிய போட்டியில் களமிறங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now