
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பேட்டி செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 55 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.