எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 172 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். அதிலும் கேப்டவுன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ஜேசன் ராய் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் ஒரு பவுண்டரி, 5 சிச்கர்கள் என 38 ரன்களை எடுத்திருந்த ஜேசன் ராய், ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டையும் இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஹான் லூபும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த ஜோஸ் பட்லர் - கேப்டன் டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மில்லர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்டில் பெஹ்லுக்வாயோ 9, ஃபாபியன் ஆலன் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அதிரடியாக விளையாட முயன்ற மிட்செல் வான் ப்யூரனும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் தாமஸ் கேபர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now