
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாட முயன்ற ஜார்ஜ் லிண்டோவும் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் கேப்டவுன் அணி 93 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் - டெவால்ட் பிரீவிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.