
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணியில் வில் ஜேக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் வில் ஸ்மீத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஸ்மீத் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த வில் ஸ்மீத் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய கைல் வெர்ரைன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இறுதியில் ஜிம்மி நீஷம் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களைக் குவித்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் தயான் அலீம் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஜோ ரூட் - ருபின் ஹெர்மான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.