
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 6 ரன்களுக்கும், ஜோர்டன் ஹார்மன் 9 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் மார்கோ ஜான்சன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்திருந்த மார்கோ ஜான்சன் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய மார்க்ரம் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.