
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. நாளை முதல் தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை தொடரின் தூதுவராக போட்டியை ஏற்று நடத்தும் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை ஐசிசி தேர்வு செய்யும்.
அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரரும், ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை ஐசிசி தூதராக தேர்வு செய்துள்ளது. இது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரால் பல இளம் சிறுவர், சிறுமியர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து ஆடத் தொடங்குவார்கள் என கூறி இருக்கிறார்.
மேலும், தான் 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது பந்தை எடுத்துப் போடும் சிறுவனாக மைதானத்தில் பணியாற்றிய நினைவுகளையும் பகிர்ந்தார். உலகக்கோப்பை தொடரில் பந்தை எடுத்துப் போட்ட சிறுவனாக இருந்து, பின் 2011இல் உலகக்கோப்பை வென்றது தான் தன் கிரிக்கெட் வாழ்வின் மணிமகுடம் என அவர் உலகக்கோப்பை குறித்த தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.