
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் இந்திய அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.