
இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போகும் அணி எது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார்.
அனைவரும் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட அழுத்தத்தை கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. ஆரம்ப காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படுவார்கள்.