
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப், “இத்தொடரில் நாங்கள் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஒரு தரமான எதிரணியை எதிர்கொண்டோம், ஆனால் ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை. நாங்கள் எப்போதும் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம். ஆனால் அணியின் பந்துவீச்சு முயற்சியைப் பாராட்ட வேண்டும். இன்று அதுவும் எங்களுக்கு கைக்கொடுக்கவில்லை.