
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையாடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் சிங் மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.